சிவகாசி:சிவகாசி கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தில் பராமரிப்பு பணியினை சிறுவர்கள் மேற்கொண்டதால் பொது மக்கள் அதிருப்தியடைந்தனர்.
சிவகாசி நகராட்சி அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தேவைகளுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டடம் ஓடுகளால் வேயப்பட்டது. கட்டடத்தினை சுற்றி மரங்களின் இலைகள் ஓடுகளில் விழுந்து நிறைந்துள்ளது. இந்நிலையில் ஓடுகளின் மேல் கிடக்கும் இலை கழிவுகளை அகற்றுவதற்காக சிறுவர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தினர் அதிகாரிகள். இளம் கன்று பயமறியாது என்பது போல் சிறுவர்கள் ஆபத்தினை உணராமல் ஓடுகளில் ஏறி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொஞ்சம் அசந்தாலும் கீழே விழ வாய்ப்பிருக்கும் இப்பணியினை கண்ட பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே இதுபோன்ற செயலில் சிறுவர்களை ஈடுபடுத்திய சம்பவம் மக்களை வேதனையில் ஆழ்த்தியது.